பேருந்து ஓட்டுநரின் வீரத்தால் உயிர் பிழைத்த அமர்நாத் யாத்ரீகர்கள்!

அமர்நாத் யாத்ரீகர்களின் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அதன் ஓட்டுநர் காட்டிய வீரம் மற்றும் சாமர்த்தியத்தால் யாத்ரீகர்கள் உயிர் பிழைத்தது தற்போது தெரிய வந்துள்ளது.
பேருந்து ஓட்டுநரின் வீரத்தால் உயிர் பிழைத்த அமர்நாத் யாத்ரீகர்கள்!

அமர்நாத் யாத்ரீகர்களின் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அதன் ஓட்டுநர் காட்டிய வீரம் மற்றும் சாமர்த்தியத்தால் யாத்ரீகர்கள் உயிர் பிழைத்தது தற்போது தெரிய வந்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த 51 யாத்ரீகர்கள் அந்த மாநிலத்தின் வல்சாத் நகரைச் சேர்ந்த ஓம் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்தில் அமர்நாத்துக்கு அண்மையில் புறப்பட்டனர். அந்தப் பேருந்தை சலீம் கஃபூர் ஷேக் என்ற ஓட்டுநர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு ஓட்டிச் சென்றார்.
அனந்த்நாக் மாவட்டத்தில் அந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் அப்பேருந்தை நோக்கி சுடத் தொடங்கினர். ஜிஜே09இஸட் 9976 என்ற பதிவு எண் கொண்ட அந்தப் பேருந்தின் மீது பயங்கரவாதிகள் இரவு 8.20 மணியளவில் துப்பாக்கியால் சுட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
எனினும், சற்றும் கலங்காத சலீம் கஃபூர் பேருந்தை தைரியத்துடன் வேகமாக இயக்கினார். அந்தப் பேருந்தை மிக விரைவாக இயக்கி பல கி.மீ. தூரம் சென்ற பிறகே அவர் நிறுத்தினார். இதனால் பயங்கரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்கள் பெரும்பாலான யாத்ரீகர்கள் மீது பாய்வது தவிர்க்கப்பட்டது. அதன் விளைவாகவே அவர்கள் உயிர் பிழைக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அந்தப் பேருந்தில் பயணித்த பெண் யாத்ரீகர் ஒருவர் கூறுகையில் , 'அனைத்து திசைகளில் இருந்தும் பயங்கரவாதிகள் சுட்டபோதிலும், ஓட்டுநர் தொடர்ந்து வண்டியை இயக்கினார். அவர்தான் எங்களைக் காப்பாற்றினார்' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், யாத்ரீகர்களின் உயிரைக் காத்த ஓட்டுநர் சலீம் கஃபூர் ஷேக்கிற்கு ஜம்மு- காஷ்மீர் அரசு ரூ.3 லட்சம் வெகுமதியை அறிவித்துள்ளது. அவருக்கு அமர்நாத் கோயில் வாரியம் ரூ.2 லட்சம் வெகுமதியை அறிவித்துள்ளது.
பயங்கரவாதிகளிடம் இருந்து பயணிகளைக் காத்தது தொடர்பாக சூரத் விமான நிலையத்தில், சலீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அவர்களின் உயிர்களைக் காக்க கடவுள்தான் எனக்கு பலம் கொடுத்தார். திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
எனினும், பேருந்தை நிறுத்தாமல் இயக்குவது என்று முடிவு செய்தேன். பாதுகாப்பான பகுதிக்கு வந்த பிறகே வண்டியை ஓட்டுவதை நிறுத்தினேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com