பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யபப்டுவதாக எழுந்துள்ள புகார் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலர் சசிகலா தற்பொழுது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பரபப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்திய சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா மௌட்கில், ஆய்வில் கிடைத்த தகவல்கள் குறித்து மாநில அரசுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில், குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து உள்ளூர் சேனல்களில் செய்தி கசிந்தது.
அதாவது இதற்காக கர்நாடக மாநில சிறைத் துறை இயக்குநர் (டிஜிபி) சத்யநாராயண ராவுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் இதற்காக ரூ.2 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரூபா எழுதியுள்ள புகார் கடிதத்தில், சிறையில் சசிகலாவுக்கு அனைத்து வசதிகளையும் செய்துத்தர, கர்நாடக சிறைத் துறை இயக்குநர் சத்யநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும், மத்திய சிறைச்சாலை வார்டன் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மொத்தமாக ரூ.1 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் ரூபா கூறிய குற்றச்சாட்டுகளை சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஆதாரங்களை அல்லது விளக்கம் அளிக்குமாறு ரூபாவுக்கு மெமோ அளித்துள்ளேன். உண்மையில் இதுபோன்ற புகார் குறித்து எனக்கோ, அரசுக்கு இதவரை எந்த கடிதமும் வரவில்லை என்று ராவ் ஐஏஎன்எஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதே சமயம், 59 வயதாகும் சசிகலாவுக்கு, மத்திய பெண்கள் சிறையில் முக்கியப் பிரமுகர்களுக்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும், சிறைச்சாலையில் சசிகலாவுக்கு உணவு தயாரிக்க என்று பித்யேக சமையலறை உருவாக்கப்பட்டு, அங்கு அவர் விரும்பும் உணவுகள் சமைத்துத் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யபப்டுவதாக தற்பொழுது எழுந்துள்ள புகார்கள் குறித்து சிறைத்துறை செயலர், உள்ளிட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே குழு விசாரணை முடிந்து அறிக்கை வெளிவரும் வரை அனைவரும் பொறுமையாக இருக்குமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.