சென்னை: காந்தியின் பேரன் என்று சொல்லி ஓட்டுக் கேட்பது கேவலம் என்று துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு ஆதரவு கோரி தமிழகத்திற்கு வருகை தந்துள்ள அவர் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் துணைத்தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது.
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபடுகின்றனர். ஆனால் இது கட்சி சார்புகள் மீறிய ஒன்றாக இருக்க வேண்டும்.
துணை ஜனாதிபதி தேர்தலில் நான் அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிடவில்லை. ஒரு சாதாரண குடிமகனாக போட்டியிடுகிறேன்.
நான் மகாத்மா காந்தியின் பேரன் என்பதற்காக, அவரது பேரன் என்று கூறி ஓட்டுக் கேட்க மாட்டேன். அவ்வாறு கேட்பது கேவலம். எனக்கு என்று உள்ள தகுதிகளே எனது வெற்றியினைத் தீர்மானிக்க வேண்டும்.
நான் தேர்தலில் போட்டியிடப் போவது பாரதிய ஜனதா கட்சிக்கு தெரியும்.அவர்கள் நினைத்தால் என்னை ஆதரிக்கலாம்.
இவ்வாறு கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்தார்.