புதுதில்லி: அதிமுக இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் சேர்க்கப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் (ஏப்ரல் 25) இரவு டி.டி.வி.தினகரனை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாக 'இரட்டை இலை' சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தினகரன் தன்னிடம் பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த தில்லி போலீஸார் தினரனிடம் நேரில் ஆஜராகும் படி சம்மன் அளித்தனர்.
சம்மன் பெற்ற தினகரன், சுமார் 37 மணி நேரம் தில்லி போலீஸார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும், தினகரனின் உதவியாளர் மற்றும் நண்பர் மல்லிகார்ஜுனனிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தினகரனின் பதில் திருப்தி அளிக்காத நிலையில் தில்லி போலீஸார் தினகரனை கைது செய்து தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சுகேஷுடன் சேர்த்து டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா இடைத்தரகர்கள் என சந்தேகிக்கப்படும் நரேஷ், லலித் குமார் ஆகியோர் மீது காவல்துறை குற்றம்சாட்டியது.
இதில், சுகேஷ் சந்திரசேகர், டிடிவி. தினகரன் இடையேயான தொலைபேசி உரையாடல் ஆதாரத்தை தில்லி போலீஸாரால் நிரூபிக்க முடியவில்லை. மேலும் லஞ்சம் பெற முயன்ற தேர்தல் ஆணைய அதிகாரி யார் என்பதையும் தெரிவிக்க முடியவில்லை.
இந்த காரணங்களால் தில்லி நீதிமன்றம் டிடிவி. தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி சுகேஷ் நீங்கலாக மற்ற அனைவரையும் தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் அண்மையில் ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து டி.டி.வி. தினகரன் 69 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்பு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், குற்றப்பத்திரிகையை பட்டியலில் தினகரன் பெயர் இல்லை எனவும் போதிய ஆதாரம் இல்லாததால் தினகரன் பெயர் சேர்க்கப்படவில்லை என்று தில்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.