உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வளாகத்துக்குள் சக்திவாய்ந்த வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை வழக்கமான சோதனைப் பணிகள் நடந்தன. பாதுகாப்புப் படையினர், மோப்ப நாய் உதவியுடன் நடத்திய சோதனையின் போது, சட்டப்பேரவைக்குள், எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கைக்குக் கீழே வெள்ளைநிற பவுடர் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் இது சக்திவாய்ந்த வெடிமருந்து என்பது தெரிய வந்துள்ளது.
அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், கடந்த ஒரு வார காலமாக உத்தரப்பிரசேதம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று உத்தரப் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சக்திவாய்ந்த வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது.