பொதுமக்களைச் சந்திக்கச் செல்லுமிடங்களில் தனக்கு குளிரூட்டும் கருவிகள், சிவப்புக் கம்பளம், சொகுசு நாற்காலி என ஆடம்பர ஏற்பாடுகள் செய்ய வேண்டாம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் ராணுவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது, அங்கு ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது முதல்வரை மிகவும் வருத்தம் அடையச் செய்தது. எனவே, இந்த சிறப்பு ஏற்பாடுகளுக்கு முடிவுகட்டும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு யோகி ஆதித்யநாத் கடந்த சில தினங்களுக்கு முன் கோரக்பூர் சென்றிருந்தார். அந்த வீரரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வர், அவர்களிடம் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
அதற்கு முன்னதாக, முதல்வரின் வருகைக்காக, அந்த ராணு வீரரின் வீட்டில் குளிரூட்டும் கருவி, சோஃபா செட் ஆகியவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் முன்புறம் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. மற்ற தெருக்களில் இருந்து மக்கள் குறுக்கிடாத வகையில், திரைச் சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்து முதல்வர் திரும்பியதும், அந்த வீட்டில் இருந்து குளிர்சாதனப் பெட்டி, சோஃபா செட் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.
இதேபோல், பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த மே மாதம் 13}ஆம் தேதி தேவ்ரியா மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போதும், முதல்வருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.