புது தில்லி: ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போகும் 4,852 எம்.பி., எம்.எல்.ஏ.க்களில், 1,581 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.
இந்திய குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 25ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 4,852 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இவர்களில் 33% பேர் அதாவது 1,581 எம்பி, எம்எல்ஏக்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள். அதிலும் 20 சதவீதம் பேர் மீது மிக மோசமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களில் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ், எம்பி மொஹம்மது என்கிற ஹுசைன் ஆகியோரும் அடங்குவர்.
குடியரசுத் தலைவரை தேர்வு செய்யப் போகும் 4,852 பேரில் 75 சதவீதம் பேர் அதாவது 3,460 எம்பி, எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள். அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
மேலும், 4852 பேர் 9 சதவீதத்தினர் மட்டுமே அதாவது 451 பேர் மட்டுமே பெண்கள். நாடாளுமன்றத்தின் மக்களவையில் 12 சதவீதம் மட்டுமே பெண் உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 10 சதவீத பெண் உறுப்பினர்கள்தான் உள்ளனர்.
சட்டப்பேரவை என்ற அளவில் எடுத்துக் கொண்டால் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் தான் அதிக பெண்கள் வாக்களிக்கப் போகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மேற்கு வங்கமும், மத்தியப் பிரதேசமும் உள்ளது. நாகாலாந்து மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு பெண் எம்பி, எம்எல்ஏ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.