மரபணு மாற்றப்பட்ட கடுகுவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், அதற்கு தங்கள் மாநிலம் அனுமதி தராது என்று ராஜஸ்தான் அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தில்லி பல்கலைக்கழத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் மரபணு மாற்றப்பட்ட கடுகை இந்தியாவில் சாகுபடி செய்யலாம் என்ற பரிந்துரைக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, அந்த கடுகுக்கு அனுமதியளிப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்னமும் முடிவெடுக்கவில்லை.
இந்நிலையில், தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநில வேளாண்துறை அமைச்சர் பிரபுலால் சைனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலாவதாக, எங்கள் மாநிலத்துக்கு மரபணு மாற்றப்பட்ட கடுகு தேவையில்லை. ஏனெனில், இதை விட சிறந்த தரமுடைய பாரம்பரியமான பல்வேறு கடுகு வகைகள் எங்கள் மாநிலத்தில் உள்ளன.
மரபணு மாற்றத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இயற்கையில் தலையிடுவதை விட, அதில் வேறு ஒன்றும் கிடையாது. அதேபோல், சுற்றுச்சூழல், மனிதர்கள் ஆகியோருக்கு மரபணு மாற்றப்பட்ட கடுகால் பாதிப்பு ஏற்படலாம் என்று கருத்து நிலவுகிறது. இதுகுறித்து உலகம் முனுவதும் விவாதமும் நடக்கிறது. இந்த விஷயத்தில் நமது பாதுகாப்பு ரீதியிலான கவலைகளுக்கு தீர்வு எட்டப்படுவதற்கு முன்பு, அதை அனுமதிக்கக் கூடாது.
மரபணு மாற்றப்பட்ட கடுகை, விவசாய களத்தில் சோதிக்கவோ அல்லது வர்த்தக ரீதியிலான சாகுபடி செய்யவோ ராஜஸ்தான் அரசு அனுமதிக்காது. அதற்கு மத்திய அரசு தனது அனுமதியை வழங்கினாலும், நாங்கள் அனுமதி அளிக்க மாட்டோம்.
வேளாண் துறை என்பது மாநில விவகாரம் சம்பந்தப்பட்டது ஆகும். இதில் மத்திய அரசு தலையிட்டு, இதைத்தான் பயிரிட வேண்டும் என்று மாநிலத்திடம் தெரிவிக்க முடியாது என்றார் சைனி.
நாட்டிலேயே அதிக அளவுக்கு கடுகை பயிர் செய்யும் மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் மாநிலம் திகழ்கிறது. அதாவது நாட்டில் நடைபெறும் மொத்த கடுகு சாகுபடியில் ராஜஸ்தானில் 46 சதவீத சாகுபடி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.