குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தும் பங்கேற்றார். அப்போது மோடி பேசுகையில், பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவி வகித்தபோது அவரது உதவியாளர் போல் கோவிந்த் செயல்பட்டதாகத் தெரிவித்தார். அவரது வெற்றிக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்த மோடி, அவருக்கு தனது அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ராம்நாத் கோவிந்த், மீரா குமார் ஆகிய இரண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் கட்சிகளின் பிரசாரம் கண்ணியமாக இருந்ததாகவும், அது இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியைக் காட்டுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு தினம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, அன்று முதல் ஒரு வார காலத்துக்கு நாடு தழுவிய நிகழ்ச்சிகளை நடத்துமாறு எம்.பி.க்களை மோடி கேட்டுக் கொண்டார். தவிர,
ஏழைகளின் நலன் மற்றும் நல்லாட்சி செயல்திட்ட நோக்கில், நாடு 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ள வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 வரை 5 ஆண்டு காலத்துக்கு விவாதங்களும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அனந்தகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.க்களையும் எம்எல்ஏக்களையும் கோரியிருப்பது நகைச்சுவையாக உள்ளது. ஏனெனில், 40 கட்சிகள் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத முதல்வர்களும் அவரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். எனவே, அவர் வெற்றி பெறுவது இப்போதே உறுதியாகி விட்டது' என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமரைத் தவிர, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, அனந்தகுமார் ஆகியோரும், பாஜக தலைவர் அமித் ஷாவும் உரையாற்றினர். குடியரசுத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது? என்பது பற்றி பாஜக எம்.பி.யான பூபேந்தர் யாதவ், எம்.பி.க்களுக்கு விளக்கம் அளித்தார்.