கடத்தல் வழக்கில் விசாரணைக்காக கொல்கத்தா போலீஸாரால் தில்லிக்கு அழைத்து வரப்பட்ட 20 வயது பெண் அவர்கள் பிடியில் இருந்து தப்பினார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
கடத்தல் வழக்கு ஒன்றில் சுக்தேவ் தாஸ் என்பவரையும், மம்தா மோல்லா என்ற பெண்ணையும் கொல்கத்தா போலீஸார் கடந்த 4-ஆம் தேதி கைது செய்திருந்தனர். இந்நிலையில், விசாரணைக்காக அவர்களை தில்லி அழைத்து வந்திருந்த போலீஸார், பங்களா பவனில் தங்கியிருந்தனர்.
தாஸ் மற்றும் மோல்லாவுடன் 2 துணை ஆய்வாளர்கள், இரு பெண் காவலர்கள், இரு காவலர்கள் கொண்ட குழு வந்திருந்தது. இந்நிலையில், மம்தா மோல்லா அவர்களின் பிடியில் இருந்து வெள்ளிக்கிழமை தப்பியுள்ளார். இதுதொடர்பாக கொல்கத்தா துணை ஆய்வாளர்களில் ஒருவரான ஜனா, பாரகம்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்ணை தேடி வருகிறோம் என்று போலீஸார் கூறினர்.