நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப், கேரள உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக மலையாள நடிகர் திலீப்பை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவர் மீது குற்றச் சதி, கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுளளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கும் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திலீப்பின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேறியிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே, போலீஸ் காவலில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் திலீப், தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி அங்கமாலி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களைக் கலைக்கக்கூடும் என்று போலீஸார் தெரிவித்ததை அடுத்து, அவரது ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்தார். மேலும், அவருக்கு போலீஸ் காவலையும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் திங்கள்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிகிறது.