பெங்களூரு: சசிகலா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவின் பணியிட மாற்றதிற்கான காரணம் குறித்து, ஊடகங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக, பரபரப்பு அறிக்கை அளித்த கர்நாடக சிறைத்துறை அதிகாரி ரூபா இன்று காலை 'திடீர்' பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக சிறைத்துறை டி ஐ ஜியாக உள்ள அவர், தற்பொழுது பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ' ரூபா பணியிட மாற்றம் வழக்கமான நிர்வாக ரீதியான நடவடிக்கைதான். இதுகுறித்து எல்லா தகவல்களையும் ஊடகங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை' என்று கோபமாக கூறினார்.
இதே விவகாரத்தில் சசிகலாவிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட சிறைத்துறை ஏடிஜிபி சத்யநாராயணாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.