பயங்கரவாதத்துக்கு நிதியுதவி?: எல்லையோர வர்த்தக நடவடிக்கைகளை விசாரிக்கும் வருவாய்த் துறையினர்
By DIN | Published on : 18th July 2017 01:05 AM | அ+அ அ- |
பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவதற்காக இந்திய - பாகிஸ்தான் எல்லைகளிடையே சந்தேகத்துக்குரிய வகையில் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வரும் தேசியப் புலனாய்வு அமைப்பினருக்கு (என்ஐஏ) உதவும் வகையில் அவர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதச் சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி அளிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் மட்டுமன்றி நூதன முறையில் நிதி திரட்டும் நடவடிக்கைகளும் நடந்து வருவதாகத் தெரிகிறது.
குறிப்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு பாதாம் பருப்பு வர்த்தகம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ பாதாம் பருப்பின் விலை ரூ.650 வரை இருக்கலாம். ஆனால், அவை ரூ.250-க்கு விற்கப்பட்டதாக ரசீதுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற சில பொருள்களுக்கு அதிகப்படியான விலை கொடுத்து வாங்கப்படுகிறது. இத்தகைய சந்தேகத்துக்குரிய வர்த்தக நடவடிக்கைகளின் வாயிலாக மறைமுகமாக பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டப்படுவதாகத் தெரிகிறது.
இதையடுத்து, இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகளின் துணையுடன் இந்த விவகாரங்களை விசாரிக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, சில வழக்குகள் மீதான விசாரணையை வருவாய்த் துறை அதிகாரிகளும், சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சில சந்தேகத்துக்குரிய வர்த்தக நடவடிக்கைகளை விசாரிக்க கூடுதல் எண்ணிக்கையிலான அதிகாரிகளை நியமிக்கப் போவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளின் பின்னணியில் பெரும்பாலும் காஷ்மீர் பிரிவினைவாதிகளே இருப்பதாகக் கூறப்படுகிறது.