குடியரசுத்தலைவர் தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள், சிறையில் இருந்து வந்து திங்கள்கிழமை வாக்களித்தனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகன் புஜ்பல், ரமேஷ் கதம் ஆகிய இருவரும் வெவ்வேறு ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக, சகன் புஜ்பலுக்கு கருப்புப் பணத் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும், ரமேஷ் கதத்துக்கு மும்பை உயர் நீதிமன்றமும் அனுமதி அளித்திருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள், மும்பையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மும்பை சிறையில் இருந்து சிறப்பு வாகனத்தில் சட்டப் பேரவை வளாகத்துக்கு திங்கள்கிழமை வந்த சகன் புஜ்பல், தனது வாக்கைப் பதிவு செய்தார். இதேபோல், ரமேஷ் கதமும் சிறையில் இருந்து வந்து வாக்களித்தார்.
பட்னவீஸ் வாக்களிப்பு: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் காலையிலேயே தங்களது வாக்குகளை செலுத்தினர்.
மொத்தமுள்ள 288 எம்எல்ஏக்களில், பகுஜன் விகாஸ் ஆகாடி எம்எல்ஏ ஷிதிஜ் தாக்குரைத் தவிர, மற்ற 287 பேரும் வாக்களித்தனர். அவர், வெளிநாடு சென்றதால் வாக்களிக்கவில்லை.