அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக 2,646 பேர் அடங்கிய யாத்ரீகர் குழு, ஜம்முவில் இருந்து பலத்த பாதுகாப்புக்கிடையே திங்கள்கிழமை புறப்பட்டது.
1,913 ஆண்கள், 583 பெண்கள், 150 சாதுக்கள் அடங்கிய அந்தக் குழு, மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் போலீஸாரின் பாதுகாப்புடன் 106 வாகனங்களில் பால்டால் மற்றும் பஹல்காம் அடிவார முகாம்களை நோக்கிப் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில், இந்தக் குழுவுடன் சேர்த்து இதுவரை 16 குழுக்கள் அமர்நாத் பனிக் குகைக்குச் சென்றுள்ளதாக அவர்கள் கூறினர். அந்த வகையில், இதுவரை 56,277 பக்தர்களும், சாதுக்களும் ஜம்முவிலிநந்து அமர்நாத் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அமர்நாத் யாத்ரீகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படும் அபாயம் உள்ளதாக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், யாத்ரீகர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போலீஸார், ராணுவத்தினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர் உள்பட 35,000 முதல் 40,000 வீரர்களை அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணியில் மத்திய அரசு ஈடுபடுத்தியுள்ளது. இந்த மாதம் 8-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை மோசமானதையடுத்து அன்று மட்டும் நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை, மறுநாள் வழக்கம்போல் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.