தங்கள் மாநிலத்தில் விளையும் விவசாயப் பொருள்களுக்கு 'பார்ன் இன் கோவா' என்று பெயர் சூட்டி விற்பனை செய்ய கோவா அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் கூறியதாவது: மாநிலத்தில் விவசாயிகளின் நலன்களைக் காப்பது குறித்து விவசாயிகளுடன் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவா மாநில வேளாண் பொருள்கள் 'பார்ன் இன் கோவா' என்ற பெயருடன் சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்படவுள்ளது. கோவாவில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், மலர்களுக்கு இந்த பெயர் வழங்கப்படும்.
இயற்கை வழி விவசாயம், பல்வேறு வகை மலர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பது, அவர்களின் வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துவது உள்ளிட்டவற்றுக்காக புதிய விவசாயக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பட்ட விவசாயிகளை நான் சந்தித்துப் பேசினேன். விளை பொருள்களை பாதுகாப்பாக வைக்க கோவாவில் போதிய வசதிகள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது தெரியவந்தது என்றார் அவர்.