கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு பிரபல தொலைக்காட்சி ஊடக நிறுவனமான மாத்ருபூமி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 75 பெண்கள் வேலை செய்கின்றனர்.
இதுவரை தொலைக்காட்சி சேனல் மட்டுமே உள்ள இந்நிறுவனம், விரைவில் டிஜிட்டல் மற்றும் தினசரி பிரிவுகளுக்கும் விரிவுபடுத்த உள்ளது.
இந்நிலையில், மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் தங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு அந்நிறுவனமானது விடுப்பு அறிவித்தது. இதுகுறித்து அதன் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் கூறியதாவது:
நம் நாட்டில் மாதவிடாய் கோளாறு என்பது பெண்களின் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்களிடம் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.
எனவே பெண்களுக்கு ஆதரவு தரும் விதமாக நாங்கள் இம்முடிவை மேற்கொண்டோம். எங்களுக்காக இரவு-பகல் பாராமல் உழைக்கும் எங்கள் மகளிர் ஊழியர்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறோம் என்றார்.
முன்னதாக மும்பையைச் சேர்ந்த பிரபல ஊடக நிறுவனமான 'கல்சர் மெஷின்' தான் முதன்முதலில் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது. மாதவிடாய் காலத்தின் முதல்நாளில் பெண்களுக்கு அதிகளவில் சிரமம் ஏற்படும். எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
இதில் கூச்சப்பட ஏதுமில்லை. இது பெண்கள் வாழ்க்கையின் அங்கம் என அந்நிறுவன மனிதவள மேம்பாட்டு தலைவர் தேவ்லீனா சன்யால் மஜும்தார் என்பவர் தனது விளக்கத்தை விடியோவாக பதிவிட்டார்.
அதுமட்டுமல்லாமல், இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோருக்கு ஆன்லைனில் கோரிக்கை அனுப்பியுள்ளது.