ஜம்மு-காஷ்மீரின், உதம்பூர், ராம்பன் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இருவர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கனமழை காரணமாக உதம்பூர் மாவட்டத்தின் லாட்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஏரியில் செவ்வாய்க்கிழமை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ரேகா தேவி (19), முகமது ஷெரீஃப் (35) என்ற இருவர் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலை மூடல்: இதனிடையே, மழை காரணமாக ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, உதம்பூர் மாவட்டத்தின் கேரி பகுதியிலிருந்து, ராம்பன் மாவட்டத்தின் பந்தியால் பகுதி வரை நெடுஞ்சாலை மூடப்பட்டது.
எல்லைச் சாலைகள் அமைப்பினரின் (பிஆர்ஓ) கடும் முயற்சியில், இயந்திரங்கள் மூலம் சாலை இடையூறுகள் அகற்றப்பட்டு, 4 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் அந்தச் சாலை திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.