பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விரும்பினால் பிகாரில் இருந்து அவரை மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தலித் மக்களின் பிரச்னைகளை எழுப்ப போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று மாயாவதி, தனது எம்.பி. பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரியைச் சந்தித்து அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். இந்த நிலையில், பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் லாலு செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கருத்துகளை எடுத்துரைப்பதற்கு சரியான வாய்ப்பு வழங்காதது மக்கள் சபையே அல்ல என்று சாணக்கியர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு தலித் பிரச்னைகளை எழுப்ப நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நாளினை நாடாளுமன்றத்தின் கருப்பு தினமாகவே கருத முடியும்.
இத்தகைய அடக்குமுறையின் விளைவாக தனது பதவியையே அவர் ராஜிநாமா செய்துள்ளார். அவருக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆதரவு எப்போதுமே உண்டு. மாயாவதி விரும்பினால் பிகாரில் இருந்து அவரை மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ளோம் என்றார் அவர்.