புபனேஸ்வர்: சர்ச்சைக்குரிய தொழில் அதிபர் மல்லையா இந்தியாவிலிருந்து தப்பக் காரணமாக அமைந்த காரணம் எது என்பது குறித்து எடுத்துரைக்கும் புதிய புத்தகம் ஒன்று நேற்று வெளியாகியுள்ளது.
பெங்களூருவினை தலைமையிடமாக கொண்ட 'கிங்பிஷர்' வியாபார சாம்ராஜ்யத்தின் தலைவர் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.9000 கோடிக்கு மேல் மோசடி செய்து விட்டு, இந்தியாவில் இருந்து தப்பி இங்கிலாந்துக்கு சென்று பதுங்கி விட்டார். தற்பொழுது இவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன
இந்நிலையில் ஒடிஷா தலைநகர் புபனேஸ்வரில் நேற்று மாலை 'கிங்பிசர்: ரைஸ் அண்ட் பால் ஆஃப் விஜய் மல்லையா' என்ற புத்தககம் ஒன்று வெளியானது. கிங்ஸுக் நாக் என்பவர் எழுதியுள்ள இந்த புத்தகமானது, விஜய் மல்லையா எப்படி 'கிங்பிஷர்' என்ற வியாபார சாம்ராஜ்யத்தினை உருவாக்கினார் என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்த புத்தகத்தினை ஒடிஷாவின் பிரபல பத்திரிக்கையான 'சம்பாட்' ஆசிரியர் சவுமியா ரஞ்சன் பட்நாயக் வெளியிட்டார்.
மேலும் விஜய் மல்லையா என்ற தனி நபரின் ஆளுமை குறித்தும், மது,மாது மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் என்று ஆடம்பரமாக அவர் வாழ்ந்ததன் பின்னணியில் உள்ள பலவேறு காரணங்களையும் இந்த புத்தகம் விரிவாக அலசுகிறது.
மேலும் இந்த புத்தகமானது அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் செல்வதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் குறித்தும் பேசுகிறது. அதன்படி மல்லையா மீதான வழக்குகளில் நீதிமன்றத்தின் பிடி இறுகும் சமயத்தில், மல்லையா வெளிநாடு செல்வதற்கு தடை கோரி நீதிமன்றத்தினை அணுகுமாறு, பாரத ஸ்டேட் வங்கிக் குழுமத்திற்கு உச்சநீதின்றதின் பிரபல வழக்கறிஞர் ஒருவர் ஆலோசனை கூறினார் என்று தெரிவிக்கிறது.
ஆனால் இந்த ரகசிய ஆலோசனையானது விஜய் மல்லையாவுக்கு கசிய விடப்பட்டதாகவும், இதன் காரணமாகவே விஜய் மல்லையா அவசர அவசரமாக இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார் என்றும் இந்நூல் தெரிவிக்கிறது.
வழக்கில் தற்பொழுது காட்டும் தீவிரத்தினை விசாரணை அமைப்புகள் அப்பொழுதே காட்டியிருந்தால் மல்லையா இந்தியாவில் இருந்து தப்பியிருக்க முடியாது என்று கூறும் இந்தப் புத்தகமானது, தகுந்த சமயத்தில் புகார்களை அளிக்காத வங்கிகளையும் குறை கூறுகிறது.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் இதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் வாழக்கை வரலாறான 'தி நமோ ஸ்டோரி' உள்ளிட்ட பல புத்தகக்கங்களை எழுதியவராவார். இதன் தேசிய அளாவிலான வெளியீடு விரைவில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.