கொல்கத்தா: ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி மூன்று வாரங்களுக்கு மேற்கு வங்கம் முழுவதும் 'பாஜகவே வெளியேறு' இயக்கத்தினை நடத்தவிருப்பதாக திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா அறிவித்துள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 1993-ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, தங்கள் உயிரை நீத்த 13 இளைஞர்களின் நினைவினைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் தியாகிகள் நினைவு தினத்தினை திரிணமுல் காங்கிரஸ் கட்சி கொண்டாடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி மூன்று வாரங்களுக்கு மேற்கு வங்கம் முழுவதும் 'பாஜகவே வெளியேறு' என்னும் இயக்கத்தினை துவங்க உள்ளோம். இந்த இயக்கமானது ஒவ்வொரு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் , வட்டாரம்,நகரம் மற்றும் கிராமங்களில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு நமது கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்டாரத் தலைவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியின் துவக்கம் மற்றும் இறுதி விழாக்களில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட காலத்தின் பொழுது 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதிதான் காந்தியடிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தினை துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.