அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஜம்முவிலிருந்து 1,877 யாத்ரீகர்கள் அடங்கிய குழு வியாழக்கிழமை புறப்பட்டது.
இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் அமைந்திருக்கும் பனிலிங்கத்தை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் தரிசித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது.
இவ்வாறு அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை தனித்தனிக் குழுக்களாகப் பிரித்து ஜம்முவில் தங்க வைப்பது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான பயணத்தில் ஈடுபட்டுள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜம்முவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில், இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றாக அமர்நாத் யாத்திரைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தக் குழுக்களில் சுமார் 2,500 யாத்ரீகர்கள் வரை இடம்பெற்றிருப்பார்கள். இந்நிலையில், ஜம்முவிலிருந்து 1,877 யாத்ரீகர்கள் அடங்கிய ஒரு குழு, வியாழக்கிழமை அமர்நாத்துக்கு புறப்பட்டது. இந்த யாத்ரீகர்களுடன் சேர்த்து இதுவரை 62,160 யாத்ரீகர்கள் ஜம்முவிலிருந்து புறப்பட்டு அமர்நாத் சென்றுள்ளனர்.