விமான நிறுவனங்கள் யாருக்கும் தடை விதிக்க முடியாது: மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் தகவல்

விமானத்தில் பயணிக்க முடியாது என்று தடை விதிக்கும் அதிகாரம் விமான நிறுவனங்களுக்கு கிடையாது என்று மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தெரிவித்தார்.
விமான நிறுவனங்கள் யாருக்கும் தடை விதிக்க முடியாது: மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் தகவல்

விமானத்தில் பயணிக்க முடியாது என்று தடை விதிக்கும் அதிகாரம் விமான நிறுவனங்களுக்கு கிடையாது என்று மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் விமானத்தில் பயணித்த சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், தனக்கு முதல் வகுப்பு இருக்கை ஒதுக்கவில்லை என்ற குற்றம்சாட்டி, விமானத்தில் இருந்து வெளியேறாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்த விமானத்தில் முதல் வகுப்பு கிடையாது என்று விளக்கத்தை ஏற்காத அவர், சமாதானப்படுத்த முயன்ற விமான நிறுவனப் பணியாளரை காலணியால் தாக்கினார். இதையடுத்து, அவரை இனி விமானத்தில் ஏற்றுவதில்லை என்று பல்வேறு விமான நிறுவனங்கள் தடை விதித்தன. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று அவர் உறுதியளித்ததை அடுத்து அவர் மீதான தடை நீக்கப்பட்டது.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் தெலுங்கு தேசம் எம்.பி. திவாகர் ரெட்டி, கடந்த மாதம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்னையை ஏற்படுத்தினார். இதையடுத்து, அவருக்கும் சில விமான நிறுவனங்கள் தடை விதித்தன. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றதை அடுத்து தடை விலக்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவையில் சமாஜவாதி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் வியாழக்கிழமை இந்த விவகாரத்தை எழுப்பினார். அப்போது, பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா உள்பட பல விமான நிறுவனங்கள் எம்.பி.க்களுக்கு தடை விதித்திருந்தன. இது சரியானதுதானா?. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை மீறல் பிரச்னை இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன், 'எம்.பி. ஒருவர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், சட்டவிதிகளுக்கு முரணான நடவடிக்கையை மேற்கொண்டாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் விமானத்தில் பயணிக்க தடை விதிப்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள விமான நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை. இந்த விஷயத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எம்.பி.க்களும் நாட்டின் குடிமக்கள்தான், அவர்கள் தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com