கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரித்துறை நடத்திய ஆயிரக்கணக்கான சோதனைகளில் ரூ.5,400 கோடி அளவுக்கும் மேல் கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை மக்களவையில் மத்திய நிதித் துணை இணை அமைச்சர் அர்ஜூன் ராம், கேள்வி ஒன்றுக்கு மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருந்தார்.
2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி முதல் 2017ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வரை நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் 1,100க்கும் மேற்பட்ட சோதனைகளில் ஈடுபட்டனர். அதோடு 5,100க்கும் மேற்பட்டோர் வங்கிகளில் டெபாசிட் செய்த பணம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன் மூலம் ரூ.610 கோடி மதிப்புள்ள நகைகள், ஆவணங்களும், ரூ.513 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.110 கோடி அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகளும் இருந்தன. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமாக கைப்பற்றப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5,400 கோடிக்கும் மேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வருமான வரித்துறையினர், பணமதிப்பிழப்பு விவகாரத்தின் போது, அதிகப்படியான தொகையை வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்தவர்களின் 2வது பட்டியலை தயார் செய்து, 'ஆபரேஷன் க்ளீன் மணி'யின் கீழ் கொண்டுவந்துள்ளது.
ஏற்கனவே 17.92 லட்சம் பேர் அடங்கிய முதல் பட்டியலை தயாரித்து அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. இதில் 7.72 லட்சம் பேர் விளக்கம் அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.