புதுதில்லி: கடந்த 3 ஆண்டுகளில் வருமான வரித்துறை மூலம் (IT) 71 ஆயிரத்து 941 கோடி ரூபாய் கருப்புப் பணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட 15 ஆயிரத்துக்கும் அதிகமான சோதனைகளில் இருந்து ரூ.5,400 கோடியும், 303.367 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் நடத்திய 1,100 சோதனைகள், 5,100-க்கும் மேற்பட்ட சரிபார்ப்புகளும் இதில் அடங்கும்.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த ஆண்டு 2017 பிப்ரவரி 28 வரையில் கணக்கில் வராத 71 ஆயிரத்து 941 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் கூட்டாகவும், தனித்தனியாகவும் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் கருப்புப் பணமும், தங்கமும் சிக்கியதாக கூறியுள்ள மத்திய அரசு, கணக்கில் வராத 2 ஆயிரத்து 890 கோடி ரூபாய் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ.147.9 கோடியும், ரூ.306.897 கோடி மதிப்புடைய தங்கமும் கைப்பற்றப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முறையே 69.1 கிலோவும், கணக்கில் வாராத 234.267 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், 110 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.