நாடு முழுவதும் இன்று தங்கம் வாங்குவது கூட சுலபமாக உள்ளது. ஆனால் சாமானியன் தக்காளி வாங்குவது கடினமாக உள்ளது. சமீபகாலங்களில் அதன் திடீர் விலை ஏற்றம் தான் இதற்கு காரணம்.
தக்காளி ஏழைகளின் எட்டாக்கனியாக மாறியது. அன்றாட உணவில் பிரதான இடம்பிடித்திருக்கும் தக்காளியின் இன்றைய நிலை இதுதான். எனவே அனைவரும் இதில் சிரமத்துக்கு உள்ளாயினர்.
ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய் விற்றது மலையேறி தற்போது கிலோ ஒன்று ரூ.120 வரை விற்கப்படுகிறது. இந்த ராக்கெட் வேக விலையேற்றத்துக்கு இதுவரை தெளிவான விவரங்கள் தெரியவில்லை. ஆனால், உற்பத்தி பாதிப்புதான் இதற்கு காரணம் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே இந்தூர் மார்கெட்டில் தக்காளி திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதோடு இல்லாமல் நாடு முழுவதிலும் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குறப்பாக மும்பை தாஹிஸார் மார்கெட்டில் ஜூலை 20-ந் தேதி சுமார் 70,000 ரூபாய் மதிப்புடைய 300 கிலோ தக்காளி திருடப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அம்மாநில போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் உள்ள காய்கறி அங்காடிகளில் தக்காளியை பாதுகாக்க பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தக்காளி விலையேற்றம் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விளைச்சல் கூடினால் வருகிற ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் தக்காளி விலை சரிய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.