உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் பிரபல தாதா சோட்டா ராஜனின் கூட்டாளியான கான் முபாரக்கை சிறப்பு அதிரடிப்படை போலீஸார் கைது செ"ய்தனர்.
மும்பை நிழல் உலக தாதாக்களில் ஒருவரான சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளியான கான் முபாரக் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதியை போலீஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், லக்னௌவின் கோல்ப் சிட்டி பகுதி அருகே கான் முபாரக் பதுங்கியிருப்பதாக உத்தரப் பிரதேச மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அவரைக் கைது செய்ய போலீஸார் முயற்சித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. முடிவில், கான் முபாரக்கை சிறப்பு அதிரடிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கான் முபாரக், துப்பாக்கியால் துல்லியமாக சுடுவதில் மிகவும் திறமை படைத்தவர். அவருக்கு எதிராக பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.