"கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்காக தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கு அரசு முயற்சியெடுத்து வருகிறது. கட்சிகளுக்கு நிதி வழங்கப்படும் முறையை தூய்மையாக்குவதற்கு எந்தக் கட்சியும் ஆலோசனை தெரிவிக்க முன்வரவில்லை' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
கட்சிகளுக்கு நிதி அளிக்கப்படும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார்.
அதாவது, அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக ரூ.2000 வரை மட்டுமே நன்கொடை அளிக்க முடியும் என்பதே அந்த அறிவிப்பாகும். தவிர, தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளிக்கும் முறையையும் அவர் அறிமுகம் செய்தார்.
இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பொருளாதாரக் கருத்தரங்கில் ஜேட்லி பங்கேற்றுப் பேசியது:
கடந்த 70 ஆண்டுகளாக இந்திய ஜனநாயகத்துக்கு கணக்கில் வராத பணம்தான் நிதியாக அளிக்கப்படுகிறது. இதைத் தடுப்பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாலும் முடியவில்லை. அரசுகள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவையும் இந்த விவகாரத்தில் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டன.
கட்சிகளுக்கு நிதி வழங்கும் நடைமுறைகளைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு நான் அரசியல் கட்சிகளை கேட்டுக் கொண்டேன். நாடாளுமன்றத்தில் வாய்மொழியாகவும், எழுத்துமூலமாகவும் நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், இதுவரை ஒருவர் கூட அது தொடர்பாக ஆலோசனை தெரிவிக்க முன்வரவில்லை. ஏனெனில் கட்சிகள் தற்போதைய நடைமுறையில் திருப்தியடைந்துள்ளனர்.
அரசியல் அமைப்பில் இருக்கும் கணக்கில் வராத பணத்தைத் தடுத்து நிறுத்துவதில் கடந்த 70 ஆண்டுகளாகத் தோல்வியடைந்தே வந்திருக்கிறோம். இந்நிலையை மாற்றுவதற்கு ஏதாவது யோசனை தெரிவிக்கப்பட்டால் அதில் குறைகாண்பது தீர்வுக்கு வழிவகுக்காது.
அதனால்தான் கடந்த பட்ஜெட்டில் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது என்ற யோசனையை நான் தெரிவித்தேன். அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம் என்றார் ஜேட்லி.