"இந்து சர்க்கார்' திரைப்படம் காங்கிரஸாரின் உணர்வுகளை பாதிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
மறைந்த பிரதமர் இந்திரகாந்தி ஆட்சிகாலத்தின்போது, இந்தியாவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. தமது பிரதமர் பதவியைக் காப்பாற்றுவதற்காக, இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய வரலாற்றில் கருப்புப் பக்கம் என்று வர்ணிக்கப்படும் இந்த அவசரநிலை காலகட்டத்தை மையமாகக் கொண்டு, "இந்து சர்க்கார்' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் மதூர் பண்டார்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்தத் திரைப்படத்துக்கு அரசு தடைவிதிக்க வலியுறுத்தியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸார் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான காங்கிரஸாரின் உணர்வுகளை இந்த திரைப்படம் பாதிக்கும். இது, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இதையே அவர் விரும்புகிறார்.
காங்கிரûஸ பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு, இத்தகைய செயல்களில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள்தான் பாஜகவின் படுதோல்விக்கு காரணமாக அமையப்போகிறது என வீரப்ப மொய்லி தெரிவித்தார்.