பாகிஸ்தான் கடந்த 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடு எச்சரித்துள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி இந்தப் போர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கார்கில் வலிமைப் பேரணியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த நாளில் கார்கில் பகுதியை நாம் மீண்டும் பெறுவதற்கு தியாகம் செய்த நமது வீரர்களின் துணிச்சலை நாம் நினைவுகூர்ந்து போற்ற வேண்டும்.
பயங்கரவாதம் என்பது மனித சமூகத்தின் எதிரியாகும். அதற்கு மதம் கிடையாது. துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் அரசின் கொள்கையாக பயங்கரவாதம் உள்ளது. பாகிஸ்தான் கடந்த 1971ஆம் ஆண்டில் இந்தியாவுடன் ஏற்பட்ட போரில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை நினைத்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிப்பதும், அதை ஊக்குவிப்பதும் தங்களுக்குப் பயன்தராது என்பதை அந்த நாடு புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் நாட்டின் மீதும், அங்கு அமைதியைப் பராமரிப்பதற்கும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் ஆகும். அங்கிருந்து ஓர் அங்குலத்தைக் கூட யாரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டோம்.
நாம் அமைதியை விரும்பும் மக்கள். எந்தவொரு நாட்டையும் நாம் இதுவரை எப்போதும் தாக்கியதில்லை. இதுவே நமது சிறப்பாகும். நாம் மோதலையோ, வன்முறையையோ விரும்புவதில்லை. நாம் அமைதியையே விரும்புகிறோம். அண்டை நாடுகளுடன் நல்லுறவையும் நாம் விரும்புகிறோம். அந்த நாடுகளும் அந்த விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதோடு, காஷ்மீரில் பதற்றான சூழ்நிலை ஏற்படவும் காரணமாக உள்ளது. நாம் போரை விரும்புவதில்லை. ஆனால் நமக்கு அமைதி மறுக்கப்படும்போது நமது வீரர்கள் உரிய பதிலடி கொடுக்கின்றனர். நம்நாட்டின் வளர்ச்சி மற்றும் நலனில் அக்கறை செலுத்தும் வலிமை நமக்கு உள்ளது என்றார் அவர்.