கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் வருமான வரித் துறை நடத்திய சோதனைகளில், மொத்தம் ரூ.71,941 கோடி கணக்கில் காட்டப்படாத தொகை கண்டறியப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை மத்திய நிதித் துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், நிகழாண்டு (2017) பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கண்டறியப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் சொத்துகள் ஆகியவை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 3 ஆண்டுகளில் 2,027 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகளுக்குப் பிறகு, கணக்கில் காட்டப்படாத தொகை ரூ.36,051 கோடி கண்டறியப்பட்டது. இதுதவிர, ரூ.2,890 கோடி மதிப்புள்ள, கணக்கில் காட்டப்படாத சொத்துகள் கண்டறியப்பட்டன.
இதே காலகட்டத்தில், வருமான வரித் துறையினர் நடத்திய ஆய்வுகளில், ரூ.33,000 கோடி கருப்புப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட அடுத்த இரு மாதங்களில் மட்டும் வருமான வரித் துறையினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகளுக்கு பிறகு கணக்கில் காட்டப்படாத தொகை ரூ.5,400 கோடி கண்டறியப்பட்டது. அவற்றில் புதிய ரூபாய் நோட்டுகளும் இடம்பெற்றிருந்தன. இதுதவிர, மொத்தம் 303.367 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, 400-க்கும் மேற்பட்ட வழக்குகள், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.