புதுதில்லி: போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற பாரதிய ஜனதாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மக்களவை இன்று கூடியதும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான மீனாட்சி லேஹி பேசும் பொழுது, ராஜிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து, தற்பொழுது முறையாக மறு விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் குறுக்கிட்டு சத்தம் போட்டு, மீனாட்சியின் பேச்சுக்கு இடையூறு செய்தனர்.. அவர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோரிக்கை வைத்தார். அனால் அவர்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. அத்துடன் தங்கள் கையில் வைத்திருந்த பேப்பர்களை கிழித்து வீசி, தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
எனவே தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளி கட்டுக்குள் வராததால் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கோகாய், சுரேஷ், ஆதிரஞ்சன் சவுத்ரி, ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ் மற்றும் ரவன் ஆகிய ஆறு உறுப்பினர்களும் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார் .