ஸ்ரீநகர்: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து இன்று காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து காஷ்மீரில் நடந்துவரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், இந்த மாதம் முதல் வாரத்தில் பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், கிலானியின் நெருங்கிய கூட்டாளிகளான, அயாஸ் அக்பர், பீர் சைபுல்லா உள்ளிட்ட 7 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் தில்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதனை கண்டித்து பிரிவினைவாதிகள் இன்று காஷ்மீரில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.