சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை கவலையளிக்கிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தெரிவித்தார்.
அன்னிய நாடு ஒன்றுடன் நமது ஏற்றுமதி குறைவாகவும், அந்த நாட்டின் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதை வர்த்தகப் பற்றைக்குறை என்று அழைக்கின்றனர். சீனாவுடன் நமது ஏற்றுமதி-இறக்குமதி இந்த ரீதியிலேயே அமைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி-நேரத்தின்போது கூறியதாவது: சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்தியத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு சீனச் சந்தையில் மிகப்பெரிய வாயப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக சீனாவுடன் விவாதித்து வருகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தை சீனத் தலைவர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு மத்திய அரசு முயற்சியெடுத்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்ட 25 நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. அந்தப் பட்டியலில் ஸ்விட்சர்லாந்து, சவூதி அரேபியா, இந்தோனேசியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவுடன் வர்த்தகச் சமநிலையைக் கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், பிரிட்டன் உள்ளிட்டவை அடங்கும்.
வர்த்தகப் பற்றாக்குறையைச் சமாளிக்க புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (2015-20), இந்தியாவில் இருந்து பொருள்கள் ஏற்றுமதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தியா கடந்த ஆண்டு (2016) டிசம்பர் முதல் நடப்பாண்டு (2017) மே மாதம் வரை பல்வேறு நாடுகளுக்கு சுமார் ரூ.14.8 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்துள்ளது என்றார் அவர்.