நிதாரி தொடர் கொலைகளில் ஒன்றான 20 வயது வீட்டு வேலைக்காரப் பெண் கொலை வழக்கில் வர்த்தகர் மொனிந்தர் சிங்கிற்கும் அவரது உதவியாளர் சுரீந்தர் கோலிக்கும் காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை மரண தண்டனை விதித்தது.
தில்லியை அடுத்த நொய்டாவில் உள்ள நிதாரி பகுதியைச் சேர்ந்தவர் வர்த்தகர் மொனிந்தர் சிங் பண்டேர். அங்குள்ள அவரது வீட்டில் ஏராளமான சிறுமிகள் கொன்று புதைக்கப்பட்டதாக போலீஸாருக்கு கடந்த 2006இல் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 19 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த 19 பேரின் கொலைகள் தொடர்பாக மொனீந்தர் சிங்கும், அவரது உதவியாளர் சுரீந்தர் கோலியும் கைது செய்யப்பட்டனர். 16 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸார், 3 வழக்குகளில் போதிய ஆதாரம் கிடைக்காததால் அவற்றை முடித்துக் கொண்டனர்.
மேற்கண்ட 16 வழக்குகளில் ஒன்றான, 20 வயது வீட்டு வேலைக்காரப் பெண் பிங்கி சர்க்கார் கொலை வழக்கில் மொனீந்தர் சிங்கிற்கும், அவரது உதவியாளர் சுரீந்தர் கோலிக்கும் காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பவன் குமார் திவாரி திங்கள்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் இருவரும் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய குற்றங்களைப் புரிந்துள்ளதை நீதிபதி தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கிற்கு முன்பாக, 9 வழக்குகளில் மொனீந்தர் சிங்கும், சுரீந்தர் கோலியும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். 7 வழக்குகளில் விசாரணை பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வந்தது. மேற்கண்ட 9 வழக்குகளில் மொனீந்தர் சிங்கிற்கு சிறைத் தண்டனைகளும், சுரீந்தர் கோலிக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.