ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு வியாபாரிகளும், வங்கிகளும் தொடர்ந்து மறுத்து வருவதாக மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்.பி. அலி அன்வர் அன்சாரி புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, அலி அன்வர் அன்சாரி பேசியதாவது: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ரூ.1, ரூ.2 மற்றும் ரூ.10 நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். குறிப்பாக, சில வங்கிகள் கூட மேற்குறிப்பிட்ட ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றன. ஆனால், அந்த நாணயங்களை வங்கிகள் தொடர்ந்து அச்சடித்து வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து கேள்வி கேட்டால் அதற்கு உரிய விளக்கமும் வங்கிகள் அளிப்பதில்லை.
ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்படுவதால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கும், வங்கிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில், பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது போல, இந்த ரூபாய் நாணயங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.