மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல் ஆகியவற்றுக்கு மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமோக ஆதரவு இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பாஜக எம்.பி.க்களை மாநில வாரியாக பிரதமர் மோடி சந்தித்து வருகிறார். அப்போது அவர்களிடம் மாநில அரசியல் நிலவரம் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வதுடன், தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலப்பணிகள் குறித்தும் விசாரித்து வருகிறார். இந்த வரிசையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்களை மோடி தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் எம்.பி.க்கள் மத்தியில் மோடி பேசியதாக கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு கடைப்பிடிக்கப்படும் மென்மையான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டுக்கு நல்லது நடக்காது. இது நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கும் தெரியும்.
ஆனால், நமது அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி அமல் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையையும், அமோக ஆதரவையும் பெற்றுள்ளோம்.
ஆட்சி நிர்வாகத்தில் நேர்மையான பாதையில் நமது அரசு பயணித்து வருகிறது. இந்த நேர்மையைத்தான் மக்களும் விரும்புகிறார்கள் என்று மோடி பேசினார்.