புதுதில்லி: குடியரசுத் தலைவராக இன்று நண்பகல் பொறுப்பேற்றுக் கொண்ட ராம்நாத் கோவிந்த், மரபுப்படி முந்தைய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியை அவரது வீடுவரை சென்று வழியனுப்பி வைத்தார்.
நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக பிகார் முன்னாள் ஆளுநரான ராம்நாத் கோவிந்த் இன்று நண்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்தெடுப்பதற்காக நடந்த தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட பிகார் முன்னாள் ஆளுநரான ராம்நாத் கோவிந்த்,தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கூட்டணி வேட்பாளரான, முன்னாள் மக்களவை சபாநாயகரான மீரா குமாரை தோற்கடித்தார்.
ராம்நாத் கோவிந்த்தின் பதவியேற்பு விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அங்கு அவருக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு செய்து வைத்தார். பின்னர் அவருக்கு குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
பின்னர் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகையினுள் ராம்நாத் கோவிந்த் நுழைவதற்கு முன்னால், முப்படைகளின் பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதற்கு அடுத்தபடியாக விடைபெற்றுச் செல்லும் பிரணாப் முகர்ஜிக்கும் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜிக்கு தற்பொழுது ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள ராஜாஜி மார்க் என்னும் பகுதியில், பத்தாம் எண் கொண்ட அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் பின்பற்றப்படும் பாரம்பரியத்தின் படி, பழைய ஜனாதிபதியை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வீடு வரை சென்று வழியனுப்பி வைக்க வேண்டும். அதன்படி குதிரையில் அமர்ந்துள்ள வீரர்கள் புடை சூழ, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரணாப் முகர்ஜியை அவரது வீடு வரை சென்று வழியனுப்பி பிரியாவிடை அளித்தார்.