பூர்வா விரைவு ரயிலில் பயணித்த பயணி ஒருவர் அந்த ரயிலிலேயே விற்கப்பட்ட பிரியாணியை வாங்கியுள்ளார். அதனை பிரித்து சிறிய அளவில் உண்ட பிறகுதான் அந்தப் பிரியாணி பொட்டலத்தில் பல்லி இருந்தது தெரியவந்தது.
உடனடியாக அந்தப் பயணி ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்தார். இந்நிலையில், அந்தப் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, அந்த உணவு ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரயில்வேத்துறை உடனடியாக ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
இதுகுறித்து ரயில்வே துறை செய்தித்தொடர்பாளர் அனில் சக்சேனா கூறியிருப்பதாவது:
இந்த விவகாரம் ஹௌரா-தில்லி இடையிலான பூர்வா விரைவு ரயில் பயணத்தின்போது செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது. அந்தப் பயணி ரயில்வேத்துறையில் தயாரிக்கப்பட்ட சைவ பிரியாணியை ஆர்டர் செய்திருந்தார். சிறிய அளவில் அந்தப் பிரியாணியை அவர் உண்ட பின்பு தான் அதில் பல்லி இருந்தது தெரியவந்தது.
எனவே, இதுகுறித்து ரயில்வேத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் அந்தப் பயணி உடனடியாக புகார் அளித்தார். அதுகுறித்த விவரங்களை நாங்கள் அந்தப் பயணியிடம் கேட்டறிந்தோம். மேலும், அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தோம்.
புகார் குறித்து விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிஏஜி ஆய்வறிக்கையில் வெளியான இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயணிகள் நலனில் ஏற்படும் இதுபோன்ற தவறுகள் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதில் ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
எனவே, உடனடியாக அந்த உணவு ஒப்பந்ததாரரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான அனைத்தும் கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் முதற்கட்டமாக நடைபெற்ற சோதனையில் இதுபோன்ற தரமற்ற உணவு தயாரித்த 8 உணவு ஒப்பந்ததாரர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன.
இனிவரும் காலங்களில் ரயில்வேத்துறை உணவு தொடர்பாக தனிக்குழு அமைத்து முழுநேரம் கண்காணிக்கப்படும் என்றார்.