சீனாவுடன் இந்திய அரசு கொண்டுள்ள உறவு பன்முகத்தன்மை வாய்ந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள், பக்குவமான முறையில் கையாளப்பட்டு வருகின்றன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூடான் ஆகிய நாடுகள் சந்தித்கும் இடத்தில் சீன ராணுவத்தின் சாலை அமைக்கும் பணியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி விட்டது. இதனால், எல்லையில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர்ப்பதற்ற சூழல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவுடனான இந்திய அரசின் உறவு பாதிக்கப்பட்டுள்ளதா? அண்டை நாடுகளுடனான கொள்கைகளை இந்திய அரசு மறுஆய்வு செய்ய இருக்கிறதா? என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங்கிடம், கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர் எழுத்துப்பூர்வமாக வியாழக்கிழமை பதிலளித்தார். அவர் கூறியதாவது:
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா-சீனா இடையே பல்வேறு நிலைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை தொடர்வதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், இரு நாடுகளும் தங்களது நலன்கள், கவலைகள், விருப்பங்கள் ஆகியவற்றுக்கு பரஸ்பரம் மதிப்பளித்து, பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கும் மோடியும், ஜி ஜின்பிங்கும் ஒப்புக் கொண்டனர்.
அனைத்து அண்டை நாடுகளுடன் நட்புறவையும், பரஸ்பர பயன்தரும் உறவுகளையும் மேம்படுத்த வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியுடன் உள்ளது.
சீனாவுடன் இந்திய அரசு கொண்டிருக்கும் உறவு பன்முகத்தன்மை வாய்ந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகள், பிரச்னைகள், பக்குவமான முறையில் கையாளப்பட்டு வருகின்றன. கருத்து வேறுபாடுகள் பிரச்னைகளாக மாறுவதற்கு இரு நாடுகளும் அனுமதிக்காது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவுடான உறவு மேம்பட்டிருக்கிறது; மேலும் விரிவடைந்திருக்கிறது என்று வி.கே.சிங் கூறினார்.