பிகார் நம்பிக்கை வாக்கெடுப்பில் 131 எம்எல்ஏக்கள் ஆதரவுடன், முதல்வர் நிதீஷ்குமார் வெற்றிபெற்றார்.
பிகார் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷுக்கு ஆதரவாக 131 எம்ஏக்களும், எதிராக 108 பேரும் வாக்களித்தனர். இதன்மூலம் நிதீஷ் குமார் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளார்.
பிகாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதையடுத்து இந்த கூட்டணி வெற்றிபெற்று, ஐக்கிய ஜனதாதளத்தின் நிதீஷ்குமார் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவரை பதவி விலக வேண்டும் என நிதீஷ்குமார் வலியுறுத்தி வந்தார். ஆனால் இதற்கு தேஜஸ்வி மறுத்ததால், மகா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதீஷ் குமார், பாஜகவுன் கூட்டணி அமைத்து மீண்டும் நேற்று முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் நிதீஷ்குமார் சட்டப்பேரவையில் இன்று பெம்பான்மை பலத்தை நிரூபித்திருக்கிறார்.
பிகார் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு, 123 தொகுதிகள் தேவை. இதில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு, 71, பா.ஜ.க.,வுக்கு, 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.