அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்திடம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிபதி மனோஜ் ஜெயின் முன்னிலையில் இந்தக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி, "இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் சுகேஷ் சந்திரசேகர் ஆஜராக வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இது குறித்து தில்லி காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்திடம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவல் 90 நாட்களை கடக்க சில நாட்களே உள்ளன.
எனவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உருவாகிவிடும். எனவே, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜாமின் கோரி சுகேஷ் சந்திரசேகர், தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதுதொடர்பான விசாரணை சனிக்கிழமை நடைபெற்றது.
அதில், சுகேஷ் சந்திரேசகர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.