தான் இன்னமும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்குப் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுவில் தில்லி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு இளங்கலை வர்த்தகப் படிப்பில் பட்டம் பெற்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ஸ்மிருதி பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், அவர் இன்னமும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்பது வெளி உலகத்துக்கு தெரியவந்துள்ளது.
3 மடங்கான அமித் ஷாவின் சொத்து மதிப்பு: இதனிடையே, பாஜக தேசியத் தலைவரும், குஜராத்தில் இருந்து மாநிலங்களவை இடத்துக்கு தன் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளவருமான அமித் ஷாவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல் அவரது வேட்பு மனு மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2012-இல் நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமித் ஷா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது சொத்து மதிப்பு ரூ.34.40 கோடியாக குறிப்பிடப்பட்டிருந்தது.
காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் சேர்ந்து குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிடவுள்ள பல்வந்த் சிங் ராஜ்புத்தின் சொத்து மதிப்பு ரூ.315 கோடியாகும். ஸ்மிருதி இரானியின் சொத்து மதிப்பு ரூ.7 கோடியாகும்.