புது தில்லி: பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஹசியா அனன் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் ராணுவத்தின் முக்கிய முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்த இவன் திட்டமிட்டிருப்பதாக அந்த எச்சரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் ஸ்ரீநகர், ஜம்முவில் உள்ள விஜய்பூர் ரயில் நிலையம், சம்பா தொழில் பகுதி, ஜம்மு மருத்துவக் கல்லூரி, குர்தாஸ்புர் ராணுவ முகாம், பஞ்சாபின் தினானர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹசியா அனன் தற்போது எங்கிருக்கிறான் என்பதை புலனாய்வுத் துறையினரால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், இந்தியாவில் வசித்து வரும் சில பயங்கரவாதிகளின் உதவியோடு, ஹசியா அனன் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹசியா அனன் தனியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளானா அல்லது மேலும் சில பயங்கரவாதிகளுடன் நுழைந்தானா என்பது தெரியவரவில்லை. தாக்குதல் நடத்தப்படலாம் என்று சந்தேகிக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவன் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே குர்தாஸ்புர், உதம்புர், பதான்கோட் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது போலவே பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே அதுபோன்ற எந்த தாக்குதலும் நடந்து விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது.