ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக, மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாராமுல்லா மாவட்டம், சோபோர் நகரில் போலீஸார் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீஸார் மீது கையெறி குண்டுகளை வீசினர். இதில், 4 காவலர்கள் காயமடைந்தனர்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில், 2 பேரைக் கைது செய்தோம். அவர்களில் ஒருவர், போலீஸார் மீது வெடிகுண்டுகளை வீசியவர் ஆவார்.
பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தத் தாக்குதலை மேற்கொள்வதற்கு காரணமான மேலும் இரு பயங்கரவாதிகளைப் பற்றியும், அவர்கள் பதுங்கியிருக்கும் இடம் குறித்தும் தெரிவித்தனர்.
இதன்பேரில், போலீஸார் அங்கு சென்று பயங்கரவாதிகள் தங்கியிருந்த குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது, வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், அந்த இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் சோபோர் நகரைச் சேர்ந்த அய்ஜாஸ் மற்றும் பஷாரத் என்பதும், இருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது என்றார் எஸ்.பி.வைத்.