ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியலை மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) திங்கள்கிழமை வெளியிட்டது.
இந்தத் தேர்வில் முதலிடம் பிடித்த கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த இந்திய வருவாய்த் துறை அதிகாரி (ஐஆர்எஸ்) கே.ஆர்.நந்தினி, 55.3 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்குத் தகுதியான நபர்களை, முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில் தேர்வு நடத்தி யுபிஎஸ்சி ஆண்டு தோறும் தேர்வு செய்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை, யுபிஎஸ்சி கடந்த 31-ஆம் தேதி வெளியிட்டது.
இந்தத் தேர்வில் 846 ஆண்கள், 253 பெண்கள் என மொத்தம் 1,099 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் முதலிடம் பிடித்த கே.ஆர்.நந்தினி, 55.3 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர், 2,025 மதிப்பெண்களுக்கு 1,120 மதிப்பெண்கள் (முதன்மைத் தேர்வில் 927, நேர்காணலில் 193) பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தைப் பிடித்த அன்மோல் ஷேர் சிங் பேடி, 1,105 மதிப்பெண்களும் (54.56 சதவீதம்), மூன்றாவது இடத்தைப் பிடித்த கோபாலகிருஷ்ண ரோனன்கி, 1,101 மதிப்பெண்களும் (54.37 சதவீதம்) பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வில் குறைந்தபட்சமாக, அபிஷேக் ஸ்ரீவாஸ்தவா என்ற மாணவர், 817 மதிப்பெண்களுடன் (40.34 சதவீதம்) வெற்றி பெற்றுள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளை மிகக் கடினமான முறையில் தேர்வு நடத்தி யுபிஎஸ்சி தேர்ந்தெடுப்பதை, இந்த மதிப்பெண் பட்டியல் காட்டுகிறது என்று மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.