புது தில்லி: நான் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டேன், உணவு தீர்ந்துவிட்டது என்று டிவிட்டரில் நக்கலடித்த இளைஞருக்கு, அங்கும் இந்திய தூதரகம் மூலம் உதவுவோம் என்று சுஷ்மா சுவராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் செயல்பாட்டைக் கிண்டலடிக்கும் வகையில், இளைஞர் ஒருவர் டிவீட் செய்திருந்தார்.
அதாவது கரன் சைனி என்பவர், தனது டிவிட்டர் பக்கத்தில், சுஷ்மா சுவராஜ், நான் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டேன், 987 நாட்களுக்கு முன்பு அனுப்பிய மங்கல்யான் கிரகத்தில் இருந்து கிடைத்த உணவு பொருட்கள் தீர்ந்துவிட்டன. அடுத்து மங்கல்யான் 2-ஐ எப்போது அனுப்புவீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள சுஷ்மா சுவராஜ், செவ்வாய் கிரகத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டிருந்தாலும், அங்கிருக்கும் இந்திய தூதரகத்தின் மூலமாக நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்று அதிரடியாக அதே சமயம் மிகவும் கண்ணியமாக பதிலளித்துள்ளார்.
இந்த பதிலுக்கு ஏராளமானோர் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சரின் பாராட்டத்தக்க செயல்பாட்டை கிண்டலடித்த இளைஞரைக் கண்டித்தும் உள்ளனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளிநாட்டில் வசிக்கும் ஏராளமான இந்தியர்களின் பிரச்னைகளை டிவிட்டர் மூலமாக கண்டறிந்து அதனை சரி செய்திருக்கிறார். வெளிநாட்டினரின் கோரிக்கைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார். சமூக தளத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தும் மத்திய அமைச்சர்களில் சுஷ்மா சுவராஜ் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.