ஜம்மு-காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் பணியாற்றி வந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் குர்விந்தர் சிங் மலைப்பகுதியில் இருந்து ஓடையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சௌஜியான் பகுதியில் எல்லைக்கு அருகே உயரமான மலைப்பகுதியில் அவர் வியாழக்கிழமை காலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 1,300 மீட்டர் உயரமான இடத்தில் இருந்து கால்தவறி சரிந்து, ஆழமான ஓடையில் விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்தார்.
குர்விந்த் சிங்கை உடனடியாக மீட்ட பாதுகாப்புப் படையினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே அவர் இறந்தார்.
இது குறித்து பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறுகையில், "குர்விந்தர் சிங்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. எல்லைப் பாதுகாப்புப் படை தீரமான ஒரு வீரரை இழந்து விட்டது. அவர் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரைச் சேர்ந்தவர்' என்று தெரிவித்தார்.