இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடையால் கோவாவின் சுற்றுலாத் துறைக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று அந்த மாநில அமைச்சர் மனோகர் அஜ்காவோன்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
மாடுகள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் கோவாவில் மாட்டிறைச்சிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. இங்குள்ள அனைத்து உணவகங்களுக்கும் தேவையான அளவு மாட்டிறைச்சி விநியோகிக்கப்படுகிறது. இதனால் அந்த வகை உணவுகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை.
பொதுவாகவே, கோவாவுக்கு சுற்றுலா வருபவர்கள் இங்குள்ள இயற்கை அழகையும், கடற்கரையையும் ரசிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். உணவு வகைகளைப் பொருத்தவரை கடல் உணவுகளையே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விரும்பி உண்கின்றனர். ஆகவே, இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடையால் கோவா மாநில சுற்றுலாத் துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றார் அவர்.