புதுதில்லி: தில்லியில் அமைந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று காலை சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தில்லியில் நார்த் பிளாக் பகுதியில் 'நிர்வாச்சா சதன்' எனப்படும் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் அமைந்துள்ளது. எட்டு தளங்களை கொண்ட அலுவலகமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை இந்த அலுவலகத்தின் தரைத் தளத்தில் அமைந்துள்ள அறை ஒன்றில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலை அறிந்தவுடன் தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து வந்தன. மூன்று வாகனங்கள் அங்கு வந்த பொழுதும், இரண்டு வாகனங்களில் வந்த வீரர்களின் துணை கொண்டு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. தீ பற்றிய தகவல் அறிந்ததுமே, தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அங்கிருந்து வெளியேறினார். இந்த தீ விபத்தானது தில்லியில் கோடை காலங்களில் ஏற்படும் சகஜமான ஒன்றுதான் என்றும், மேலும் மின் கசிவு எதுவும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையத்தில் இன்று சசிகலா அணியினர் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது